கனமழைக்கு செட்டில்மென்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பழங்குடியின மக்களின் 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையை அடுத்துள்ள கல்லாறு செட்டில்மென்ட் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் வால்பாறை பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த கல்லாறு செட்டில்மென்ட் பழங்குடியின மக்கள் அதிகாரிகளிடம் புதன்கிழமை மனு அளித்தனர். அதில் கனமழைக்கு செட்டில்மென்ட் பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன. இதில், அப்பகுதியில் உள்ள 18 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக குழுந்தைகளுடன் வசிக்க இடமின்றி தவித்து வருகிறோம். எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்கு வந்து வீடுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளனர்.