மத்திய அரசின் "பேம் இந்தியா' திட்டத்தில் கோவைக்கு 100 மின்சாரப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை இயக்க வழித்தடங்கள் குறித்த ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் "பேம் இந்தியா' திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 825 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்படுவதாக மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி அறிவித்தது.
இதில், கோவை மாவட்டத்துக்கு 100 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவை கோட்டத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு கோட்டத்துக்கு 50 மின்சாரப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கோவை கோட்ட போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் அடுத்த மாதம் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்போது, கோவையில் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கான வழித் தடங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆய்வு செய்வதற்காக போக்குவரத்துக் கழகம் சார்பில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவடைந்த பிறகு வழித்தட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படும் என்றார்.