கோவையில் நான்கரைக் கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவை, பீளமேடு அருகேயுள்ள காந்தி மாநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர் வைத்திருந்த கைப்பையைச் சோதனையிட்டதில் அதில் நான்கரைக் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணம்பட்டி போலீஸார் அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர், கணபதி ஹட்கோ காலனியைச் சேர்ந்த உன்னி என்ற மதுசூதனன் (25) என்பதும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.