சூலூர் அருகே சிந்தாமணிப்புதூரில் பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கிய 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ்(35). இவர், சூலூரை அடுத்த சிந்தாமணிபுதூர் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் கேஷியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கனகராஜ் பெட்ரோல் பங்கில் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் இருந்துள்ளார்.
அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர். பெட்ரோல் நிரப்பியபோது, சரியான அளவு பெட்ரோல் நிரப்பபடவில்லை எனக் கூறி அங்கிருந்த ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து, கனகராஜ் கேட்டதற்கு, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் இருவர், கனகராஜை தாக்கியதாகத் தெரிகிறது.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சூலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கனகராஜ் இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் (22), தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது (21) ஆகியோரைக் கைது செய்தனர்.