கோவை, செல்வபுரம் அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் நீதிமன்றத்திலும், ஒருவர் காவல் நிலையத்திலும் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.
கோவை, செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் தனது நண்பர் ரமேஷுடன் செல்வபுரம் 60 அடி சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதைத் தொடர்ந்து இருத் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் நான்கு பேரும், மணிகண்டனைத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், மணிகண்டனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது தந்தை வெங்கடாசலம் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (37) என்பவரை மணிகண்டன் தாக்கியதால் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மணிகண்டனை தாக்கியது பலராமன், பரத்வாஜ், தினகரன், சேதுராமன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 4 பேரை போலீஸார் தேடி வந்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
இந் நிலையில் கொலை வழக்கு தொடர்பாக பரத்வாஜ், மனோஜ் ஆகியோர் கோவை 5 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும், பலராமன் செல்வபுரம் காவல் நிலையத்திலும், சேதுராமன், தினகரன் ஆகியோர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திலும் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.