கோவை விமான நிலையத்துக்கு வந்த பயணியிடம் இருந்த சாட்டிலைட் செல்லிடப்பேசியை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை ராம் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (51). இவர் நியூஸிலாந்து நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந் நிலையில், உறவினர்களைப் பார்ப்பதற்காக சில நாள்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் சென்னை செல்வதற்காக வியாழக்கிழமை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது, சுங்கத் துறை அதிகாரிகள் பாலாஜியின் உடமைகளை பரிசோதனை செய்தனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட சாட்டிலைட் செல்லிடப்பேசி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் அவரை பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தகவல் தொடர்புக்காக சாட்டிலைட் செல்லிடப்பேசி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் நியூஸிலாந்து நாட்டில் இந்த வகை செல்லிடப்பேசிக்குத் தடை கிடையாது என்பதால் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சாட்டிலைட்
செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்த போலீஸார் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்து அவரை விடுவித்தனர்.