கோவையில் குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 300 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவை மாநகராட்சி 16, 17ஆவது வார்டுகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி திமுக சார்பில் வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பாப்பநாயக்கன்புதூர் பகுதி பொறுப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு எதிர்புறத்தில் அதிமுகவினர் மழை வேண்டி யாகம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இதைக் கண்டித்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். அங்கு வந்த போலீஸார், அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இருப்பினும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடவில்லை. இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுகவினர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 300 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.