கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை, பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய நபரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
சேவூரைச் சேர்ந்தவர் லோகநாதன்(53). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கோவில்பாளையத்தில் உள்ள பேக்கரி முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்றார். அப்போது லோகநாதனின் இருசக்கர வாகனத்தில் இருந்த 2.5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை ஒரு நபர் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவரை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.