கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 202 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெண்களுக்கான இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 100 பயனாளிகளுக்கு மானியத்தொகையும், சமூகநலத் துறையின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் காப்பீட்டுத் திட்டத்தில் 50 பயனாளிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வைப்புப் பத்திரங்களும், மாற்றுத் திறானிகள் நலத் துறையின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.15.64 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டன.
மேலும், ரூ.68 ஆயிரம் மதிப்பில் 26 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.13 லட்சம் நிவராணத் தொகை என மொத்தம் 202 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 33 ஆயிரத்து 140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன், தமிழ்நாடு வாழ்வாதார திட்ட இயக்குநர் செல்வராசு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சமூகப் பாதுகாப்புத் திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.