கோவையில் தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு போட்டிகள் இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றன. போட்டிகளை ஜி.எஸ்.டி., கலால் துறை இணை ஆணையர் மு.பெரியசாமி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் வெ.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகமது ரஃபி வாழ்த்துறை வழங்கினார். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் த.திலீப்குமார் வரவேற்றார். மன்றத்தின் செயலர் ப.பா.ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற உள்ள கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.