கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் கடந்த சில ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. குறிப்பாக பருவ மழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால், தென்மேற்குப் பருவ மழைக்கு முன்பே கோவை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் ஈரோடு, சத்தியமங்கலம், உடுமலைபேட்டையைச் சேர்ந்த 3 பேரும், கோவையைச் சேர்ந்த 2 பேரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது:
சாதாரண காய்ச்சல் பாதிப்புகளுடன் வந்தவர்களுக்கு மேற்கொண்ட ரத்தப் பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, 5 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காய்ச்சல் தீவிரம் குறித்து கண்காணிக்கப்படுகிறது.
தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து டெங்கு கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது. எனவே, சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதன் மூலம், தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பதன் மூலம் டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமாக இருந்தால் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.