மதுக்கரையை அடுத்த செட்டிபாளையம் அருகே டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கோவை, ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் பழனிசாமி (41) ஓட்டுநர். இவர், தனது வேனில் வடசித்தூரிலிருந்து செட்டிபாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை மதியம் வந்து கொண்டிருந்தார். அவருடன், ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவரும் உடன் இருந்தார்.
பெரியகுயிலை பிரிவு மருதகாளியம்மன் கோயில் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன், அங்கிருந்த டேங்கர் லாரியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனிசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.