கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்:  சிபிஐ விசாரிக்கக் கோரி தந்தை வலியுறுத்தல்

கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை வலியுறுத்தி உள்ளார். 

கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை வலியுறுத்தி உள்ளார். 
கோவைப்புதூர் பிரிவு பி.கே.புதூர் இ.பி.காலனியைச் சேர்ந்தவர் கங்காதரன். அப்பகுதியில்  உணவு விடுதி நடத்தி வருகிறார். இவர் செய்தியாளர்கள் சந்திப்பில் வியாழக்கிழமை கூறியதாவது: 
கோவை  க.க.சாவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், எனது மகள் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். அவர் ஏப்ரல் 25 ஆம் தேதி எங்கள் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு விசாரணை நடத்த காவலர்களுடன் வீட்டுக்கு வந்த உதவி ஆய்வாளர், என் மகளின் கல்லூரி அடையாள அட்டை, நோட்டுப் புத்தகம், மற்றும் சில கடிதங்களை எடுத்துக் கொண்டு சென்றார். 
மறுநாள் குடும்பத்தார், நண்பர்களுடன் குனியமுத்தூர் காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கு ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருந்த  2 தாள்களில் போலீஸார் என்னிடம் கையொப்பம் பெற்றனர். எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. 
கையெழுத்துப் போட்டால்தான் உன் மகளின் சடலத்தை அரசு மருத்துவமனையில் இருந்து தருவார்கள் என்ற கூறியதால் கையெழுத்துப் போட்டேன். அதன் பிறகு என் மகளின் உடலை, எங்களின் சொந்த ஊரான கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் தலச்சேரிக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்தோம். 
அதன் பிறகு 2 வாரங்கள் கழித்து, என் மகளின் மரணம் குறித்து கல்லூரியில் உள்ள என் மகளின் தோழிகளிடம் விசாரித்தபோது, வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், என் மகளை காதல் வலையில் வீழ்த்தி அவரை மதம் மாறச் சொல்லித் துன்புறுத்தியதாகத் தெரிய வந்தது. மேலும், என் மகள் இறப்பதற்கு முன்பு வீட்டுக்கு வந்த அந்த மாணவர், மதம் மாற மறுத்தால் கொன்று விடுவேன் என மிரட்டிச் சென்றுள்ளார். செல்லிடப்பேசி குறுஞ்செய்தியிலும் மிரட்டல் விடுத்துள்ளார். இதன் காரணமாகவே, என் மகள் தற்கொலை செய்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவருடன் படிக்கும் சில மாணவர்களுக்கு  மதவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது. இவை அனைத்தும் தெரிந்தும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். என் மகளின் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். 
பேட்டியின் போது, பாஜக அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரமூர்த்தி,  மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com