அன்னூர், ஓதிமலை சாலை சந்திப்பு அருகே லாரி மோதியதில் தனியார் நிறுவனத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அன்னூர் அருகிலுள்ள அல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிசந்திரன் (53), இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் வியாழக்கிழமை மதியம் மேட்டுப்பாளையம் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
ஓதிமலை சாலை சந்திப்பு அருகே சென்றபோது அதே திசையில் வந்த லாரி மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
லாரி ஓட்டுநர் சுப்பிரமணி மீது அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.