சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கந்தசாமி பொதுமக்களின் தேவைகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சூலூர் தொகுதி பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காண உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த இரு பேரூராட்சிகளிலும் குடி நீர் பிரச்னை இல்லை. கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 50 தெருவிளக்குகள் அமைக்க கோரப்பட்டது. கண்ணம்பாளையத்துக்கு வரும் தண்ணீர் பாதையான கால்வாயை சுத்தப்படுத்தவும், குளத்தை தூர்வாரவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
சூலூர் பேரூராட்சிப் பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டவும், சூலூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் வணிக வளாகம் கட்டவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேல்நிலைத்தொட்டிகள் கட்ட வேண்டிய பகுதிகள் கண்டறியப்பட்டது. சூலூரில் இருந்து கலங்கல், பள்ளபாளையம் பகுதிகள் வழியாக ஒண்டிப்புதூர் வரையிலான திருச்சி சாலையை அடைய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சூலூர் பெரிய குளம், சிறிய குளங்களை தூர்வார அனுமதி கோரப்படும் என்றார்.