அன்னூர் அருகேயுள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள கரியகவுண்டனூரைச் சேர்ந்தவர் கனகராஜ். பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா. மகள் அரும்பதா(2.5).
இவர்கள் விளாங்குறிச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கனகராஜ், அன்னூரில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். இதையடுத்து காஞ்சனா தனது உறவினர்கள் குப்புராஜ் அவரது மகன் ரகுநாதன், உறவினர்கள் பேச்சியம்மாள், பூபதி ஆகியோருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் குழந்தை அரும்பதாவைக் காணவில்லை எனக் காஞ்சனா கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் குழந்தையைத் தேடினர்.
இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அரும்பதா சடலம் மிதந்துகொண்டிருந்ததை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து சடலத்தை மீட்ட பீளமேடு போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்றும், வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளார் என்பதும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த வழக்கில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள சிலர் மீது சந்தேகம் இருப்பதால் அவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் உறவினர்களுக்கும், கனகராஜுக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இதன் காரணமாக குழந்தை கொலை செய்யப்பட்டாரா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.