கோவை, உக்கடத்தில் குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் முயற்சியைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
கோவை, உக்கடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1இல் ஆயிரத்து 392 குடியிருப்புகள் உள்ளன. இங்கு 4 நாள்களுக்கு ஒருமுறை மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பருவமழை சரியாக பெய்யாததால் கோவை மாநகரப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் 8 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை, உக்கடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1இல் கடந்த ஏப்ரலில் 4 நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீர், தற்போது 8 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று வலியுறத்தி அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதி அருகே சாலை மறியலில் ஈடுபட செவ்வாய்க்கிழமை முயற்சி செய்தனர். தகவலறிந்த உக்கடம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது,. போலீஸாரை முற்றுகையிட்ட மக்கள் சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசிய போலீஸார் உடனடியாக அப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் முயற்சியைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.