கோவையில் பள்ளி மாணவர்களை ஜாதிப்பெயரைக் கூறி திட்டியதுடன், தரக்குறைவாக நடத்திய பள்ளி தலைமையாசிரியரை திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.முருகன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை, சரவணம்பட்டி கந்தசாமி நகரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஜெயந்தி என்பவர் தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதில் 30- க்கும் அதிகமான மாணவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களை தலைமையாசிரியை ஜாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிப்பறை சுத்தம் செய்ய வலியுறுத்தி தரக்குறைவாக நடத்துவதாகவும் மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தலைமையாசிரியை ஜெயந்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.முருகன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆட்சியரின் உத்தரவின்பேரில் தலைமையாசிரியை ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.