இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான ஃப்ளோ அமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கடற்படை பெண் அதிகாரி பி.ஸ்வாதிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான "ஃப்ளோ' மகளிர் அமைப்பு சார்பில் சாதனா என்ற பெயரில் மகளிர் தின விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கடற்படை அதிகாரி பி.ஸ்வாதி பங்கேற்றார். இவருக்கு சிறந்த மகளிருக்கான விருது வழங்கப்பட்டது. விருதை ஏற்றுக்கொண்ட பி.ஸ்வாதி, கடற்படையில் தனது அனுபவங்கள் குறித்து பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில், கோவை கடற்படைத் தளத்தின் உயரதிகாரி ராஜீவ் சௌத்ரி, ஃப்ளோ அமைப்பின் தேசியத் தலைவர் பிங்கி ரெட்டி, கோவை கிளைத் தலைவர் ஜெயந்தி மனோகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.