பணத் தகராறில் தலையில் கல்லைப் போட்டு மாமியாரைக் கொலை செய்த மருமகன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
சூலூரை அடுத்த அரசூர், செங்கோடகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் (56), ஆசீர்வாதம்மாள் (46) ஆகியோரின் மகள் அமலாராணி (29). இவரது கணவர் சிவகுமார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு விபத்தில் சிக்கி சிவகுமார் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து, சூலூர் அருகே குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(35) என்பவரை அமலாராணி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இறந்து போன சிவகுமார் நகையை அடமானம் வைத்து ஒருசிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்த நகைகளை ஏலம் போகாமல் தடுக்க ராஜேந்திரனின் தாயார் கலாமணியிடம் இருந்து அமலாராணி ரூ.ஒரு லட்சம் பெற்றுள்ளார். பின்னர் கொடுத்த பணத்தை கணவர் ராஜேந்திரன், மாமியார் கலாமணி ஆகியோர் திருப்பிக் கேட்டு வந்துள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து, அமலாராணியின் பெற்றோர் மரியதாஸ், ஆசீர்வாதம்மாள் ஆகியோர் மருமகன் ராஜேந்திரன் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுள்ளனர். அப்போது, கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த ராஜேந்திரன், கல்லால் ஆசீர்வாதம்மாளின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆசீர்வாதம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவர் மரியதாசையும், ராஜேந்திரன் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மரியதாஸின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீஸார், ஆசீர்வாதம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மாமியாரை கொலை செய்த மருமகன் ராஜேந்திரன், அவருக்கு உதவிய தாயார் கலாமணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.