சாதனை விளக்கப் பேரணி: பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு
By DIN | Published On : 04th March 2019 07:15 AM | Last Updated : 04th March 2019 07:15 AM | அ+அ அ- |

பாஜக சார்பில் நடைபெற்ற சாதனை விளக்கப் பேரணியின்போது அனுமதிக்கப்படாத பகுதிகளில் பேரணி சென்றதாக அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜக சார்பில் அக்கட்சியின் சாதனை விளக்கப் பேரணி கோவையில் மூன்று இடங்களில் தொடங்கியது. இதில் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், சாய்பாபா காலனி அருகே பாரதி பார்க் பகுதியில் அனுமதிக்கப்பட இடங்கள் தவிர பிறப் பகுதிகளிலும் நிர்வாகிகள் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் கார்த்திக் மற்றும் சிலர் மீது இரண்டு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல ரத்தினபுரி ஆறுமுக்குச் சந்திப்பு பகுதியில் அனுமதி இல்லாத இடங்களில் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்ற பாஜக தொண்டர்கள் மீது ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.