வால்பாறையில் ஏழை எளிய மக்களுக்கான அடுக்கமாடிக் குயிருப்புகள், சுற்றுலா வளர்ச்சித் திட்டமான தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைப்பக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
வால்பாறை நகராட்சி நிர்வாகம் மற்றம் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 112 அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளன.
இப் பணிகளுக்காக வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வால்பாறை அமீது, துணைத் தலைவர் மயில்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ரவிகுமார் வரவேற்றார். இந்த விழாவுக்கு தலைமையேற்று ரூ.5 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா, ரூ.2 கோடி மதிப்பில் படகு இல்லம், ரூ.9.92 கோடி மதிப்பில் 112 அடுக்குமாடி குடியிருப்பு ஆகியப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 150 பேர்களுக்கு கூட்டுறவு நகர வங்கி மூலம் நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கி பேசியதாவது:
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நேக்கில் தற்போது தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வரும் தினக்கூலியில் ரூ.5 மற்றும் டேன்டீ தொழிலாளர்களுக்கு ரூ.12.50 உயர்த்த வழங்க முதல்வர் அறிவித்துள்ளார். இப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கூடுதல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படுவதோடு அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி. சி.மகேந்திரன், வால்பாறை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.