குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர், ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குருடம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வடமதுரை தண்டபாணி நகரைச் சேர்ந்தவர் சம்பத் மகன் வினோத்குமார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வினோத் தன்னுடைய வீட்டுமனையை வரன்முறைபடுத்துவது தொடர்பாக குருடம்பாளையம் ஊராட்சிச் செயலாளர் பிரகாஷை புதன்கிழமை அணுகியுள்ளார். அப்போது, பிரகாஷ் ரூ. 2 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இது குறித்து வினோத் கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஏற்பாட்டின்படி குருடம்பாளையம் ஊராட்சிக்கு மீண்டும் வியாழக்கிழமை சென்ற வினோத், பிரகாஷை சந்தித்துப் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, அலுவலகத்தில் உள்ள தனலட்சுமியிடம் பணத்தைக் கொடுங்கள் என்று பிரகாஷ் கூறியுள்ளார். வினோத் பணத்தைக் கொடுக்கும்போது, அலுவலகத்துக்குள் நுழைந்த டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பணத்தைப் பறிமுதல் செய்தனர். பிரகாஷ், இந்திராணி, தனலட்சுமி ஆகிய மூவரிடமும் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை செய்த போலீஸார் அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 63 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையின்போது, பெ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றிய உயரதிகாரிகள் வற்புறுத்தியதால்தான் பணம் பெற்றதாக பிரகாஷ் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஊராட்சிகளின் தனிஅலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான தனமணி வரவழைக்கப்பட்டு, அவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. சம்பந்தப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.