கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். அவர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர் மாவட்ட மதிமுக அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அவரை மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார் வரவேற்றார்.
இதையடுத்து பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்றார்.
சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக், மதிமுக நிர்வாகிகள் சேதுபதி, மு.தியாகராஜன், கிருஷ்ணசாமி, கணபதி செல்வராஜ், சற்குணம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.