பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 4 பேரின் முகநூல் நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச விடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரும் முகநூல் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பெண்களுடன் நட்பாகப் பேசி பழகியது தெரியவந்துள்ளது. தற்போது இந்தக் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளதால் இவர்களது முகநூல் நட்பு பட்டியலில் இருந்த சிலர் தங்களது முகநூல் கணக்கை முடக்கியுள்ளனர்.
எனவே, இவர்களுக்கும் இந்தக் குற்றங்களில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என சிபிசிஐடி போலீஸார் கருதுகின்றனர். இதன் காரணமாக கைது செய்யப்பட்ட நபர்களுடன் முகநூலில் நெருங்கியத் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியலைத் தயார் செய்து அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் விடியோக்கள் சில சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதைத் தடுத்து, விடியோக்களைப் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதன்படி சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு விடியோக்களைப் பரப்புவதைத் தடுப்பது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடியோக்களைப் பரப்பும் நபர்களின் தகவல்களைச் சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.