வால்பாறை ஐயப்ப சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வால்பாறை, வாழைத்தோட்டம் பகுதியில் ஐயப்ப சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கோயில் கமிட்டி மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கொடிமரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொடி மர பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா கடந்த 11ஆம் தேதி துவங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய கொடிமரத்துக்கு புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது ஆயிரக்கனக்கான பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.