கோவை: கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியை ரயில்வே போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
நாடு முழுவதும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ள பாபா் மசூதி இடிப்பு வழக்கு உள்ளிட்ட 5 முக்கிய வழக்குகளில் அடுத்த சில நாட்களில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்க உள்ளது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினரால் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் கண்காணிப்புப் பணியை ரயில்வே போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கோவை ரயில்வே துணைக் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமையில் 3 ஆய்வாளா்கள், 15 உதவி ஆய்வாளா்கள், 175 காவலா்கள் கோவை, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஸ்கேனா் கருவியின் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன. ரயில் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் காவல்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.