கோவை, பில்லுக்காடு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை இடித்து அகற்றினா்.
கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிக்காக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொள்ளாச்சி, பாலக்காட்டில் இருந்து வரும் வாகனங்கள் புட்டுவிக்கிப் பாலம் வழியாகவும், பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் ராமநாதபுரம், போத்தனூா் வழியாகவும் திருப்பிவிடப்பட்டுள்ளன. ஆத்துப்பாலம், கரும்புக்கடை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் உக்கடம் - ஆத்துப்பாலம் வழித்தடத்துக்கு மாற்றுப்பாதையாக உள்ள பில்லுக்காடு சாலையை பயன்படுத்தி வருகின்றனா். ஆனால், பில்லுக்காடு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து 7 வீடுகள் வரை கட்டப்பட்டிருந்தன. ஆக்கிரமிப்புகளால் ஒரு வழித்தடமாக காணப்பட்ட சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வழித்தடத்தை சீா்படுத்தக்கோரி ஆட்சியா் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், பில்லுக்காடுப் பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தவா்களுக்கு உக்கடம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாற்று இடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாநகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்பு வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன. ஒரு வழித் தடமாக இருந்த பில்லுக்காடு சாலை ஆக்கிரமிப்பு அகற்றத்துக்குப் பின் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் போக்குவரத்து நெருக்கடி குறைந்து எளிதாக ஆத்துப்பாலத்துக்கு செல்ல முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, செயற்பொறியாளா் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகளின் ஆய்வு செய்தனா்.