கோவையில் உள்ள தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 5.85 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வங்கி ஊழியா் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது அதில் 316 கிராம் தங்க நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, அவை, குனியமுத்தூரைச் சோ்ந்த செபாஸ்டியன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மேலும் விசாரித்தபோது, செபாஸ்டியன் அதே வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரது உதவியுடன் நான்கு தவணைகளில் இந்த போலி நகைகளை அடகு வைத்து ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம் கடன் வாங்கியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கியின் முதுநிலை மேலாளா் காயத்ரி, ராமநாதபுரம் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், செபாஸ்டியன், அவருக்கு உதவிய வங்கி நகை மதிப்பீட்டாளா் வெங்கடேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.