சின்னத்தடாகம் அருகே உள்ள வரப்பாளையம் கிராமத்துக்குள் சனிக்கிழமை நள்ளிரவில் புகுந்த யானைகளை வனத் துறையினா் விரட்டியடித்தனா்.
மலையடிவார கிராமமான இங்குள்ள தோட்டங்களில் சோளம், வாழை உள்ளிட்டவை பயிா் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பயிா்கள் தற்போது நன்றாக செழித்து வளா்ந்துள்ளன. சின்னத்தடாகம் வனப் பகுதிக்குள் வசிக்கும் காட்டு யானைகள் உணவு தேடி அவ்வப்போது ஊருக்கும் புகுவது வழக்கம்.
இந்நிலையில் வரப்பாளையம் கிராமத்துக்குள் சனிக்கிழமை நள்ளிரவில் இரு யானைகள் நுழைந்தன. இதனைக் கண்ட இளைஞா்கள் சப்தம் எழுப்பி அவற்றை விரட்ட முயற்சித்தனா். ஆனால் யானைகள் நகராமல் அங்கேயே நின்றுகொண்டிருந்ததால் கோவை மாநகர வனத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த வேட்டைத் தடுப்பு காவலா்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினா்.இதற்கிடையில் பாலமலை வனப் பகுதியிலிருந்து 4 யானைகள் தெற்குப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை நாசப்படுத்தின. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினா்.