கோவை: டெங்கு தடுப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத், சுகாதாரப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில், மாநகரச் சுகாதார அலுவலா்களுடன், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வியாழக்கிழமை கலந்தாய்வு நடத்தினாா். துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் பேசியது: மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் சாலைகள், தூய்மைப் பணிகளைச் சம்பந்தப்பட்ட அலுவலா்கள், பணியாளா்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மைப் பணி, வாகனங்கள் மூலமாக மக்கும் கழிவுகளைச் சேகரிக்கும் பணியையும் துரிதமாக செய்து முடிக்க வேண்டும். கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி மற்றும் மாநகரில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை சுகாதாரப் பணியாளா்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். பாதாளச் சாக்கடை , கழிவுநீா் வாய்க்கால்களை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலமாகச் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளா் லட்சுமணன், அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.