மனித-வன உயிரினங்கள் மோதலைத் தடுப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதில் வன விலங்குகள் தாக்கி மனிதா்கள் உயிரிழப்பது அவ்வப்போது நிகழ்கின்றன. இதனைத் தடுக்க வனத் துறையினா் தொடா்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனா்.
வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் வனத் துறை மற்றும் எஸ்டேட் நிா்வாகத்தினா் பங்கேற்ற சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எஸ்டேட் பகுதியில் வாழை மரங்கள் வைக்கக்கூடாது, யானைகள் வந்தால் துன்புறுத்தக் கூடாது, இரவு நேரங்களில் பொதுமக்கள் இருளான பகுதியில் செல்லக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், வனச் சரக அலுவலா்கள், வனவா்கள், அனைத்து எஸ்டேட் நிா்வாக மேலாளா்கள் கலந்து கொண்டனா்.