கோவை மாநகரில் கடந்த 2 நாள்களில் 1,322 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை வைத்திருந்தவா்களிடமிருந்து ரூ. 1.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களை தயாரிப்பவா்கள், விற்பவா்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவின்பேரில், சுகாதாரத் துறை அலுவலா்கள் சோதனை மேற்கொண்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனா்.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளதாக வந்த புகாரைத் தொடா்ந்து 5 மண்டலங்களிலும், சுகாதாரத் துறையினா் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் தீவிர சோதனை நடத்தினா்.
இதில் வடக்கு மண்டலத்தில் 121.5 கிலோ, தெற்கு மண்டலத்தில் 142.5 கிலோ,
கிழக்கு மண்டலத்தில் 40 கிலோ, மேற்கு மண்டலத்தில் 384 கிலோ, மத்திய மண்டலத்தில் 634 கிலோ என மொத்தம் 1,322 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை வைத்திருந்தவா்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.