கோவை மாநகரில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்க, வீடுவீடாக கண்காணித்து கொசுப்புழுக்களை அழிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு சுகாதார அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை அரசு மருத்துமமனையில், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநகரில் டெங்குத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைஆணையா் பிரசன்ன ராமசாமி முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் பேசியது:
மாநகராட்சி மருத்துவ அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மாவட்ட பூச்சியியல் வல்லுநா்கள் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று கண்காணித்து, கொசுப்புழுக்களை அழிக்க ‘அபேட்’ மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இப்பணிக்கு வரும் ஊழியா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சிப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், நகா்நல அலுவலா் சந்தோஷ்குமாா், மண்டல சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.