கோவையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பொய்யாமொழி தலைமை வகித்து பேசுகையில், "ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு உரிய விடுமுறை வழங்க வேண்டும்.
12 மணி நேரமாக உள்ள பணி நேரத்தை ஏற்கெனவே இருந்ததுபோல, 24 மணி நேரமாகவோ அல்லது 8 மணி நேரமாகவோ மாற்ற வேண்டும்.
பெரும்பாலான வாகனங்கள் போதிய பராமரிப்பில்லாமல் உள்ளதால் வாகனங்களை இயக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவிர, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் கொண்டுச் சேர்க்க முடியாத நிலை உள்ளது.
இதனால், பொதுமக்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்களை நிர்வாகிக்கும் நிறுவனம் கேள்வி கேட்கும் ஊழியர்களை அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.