கோயில் புறம்போக்கு நிலங்களைக் கையகப்படுத்த வழிவகுக்கும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திருத்தொண்டர் சபைத் தலைவர் ஆ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:
கோயில் புறம்போக்கு நிலங்களைக் கைப்பற்றி நிலமில்லாதவர்களுக்கு வழங்க உள்ளோம் எனக் கூறி தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. கோயில் புறம்போக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது இந்த அரசாணை.
தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கோயில் புறம்போக்காக உள்ளது. முதல் கட்டமாக ஆயிரம் ஏக்கர் நிலம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக ஆளுநரை சில நாள்களுக்கு முன்னர் சந்தித்து மனு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் சட்டரீதியாக இதை எதிர்கொள்வோம். நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்றால் நத்தம் புறம்போக்கு நிலங்களை அரசு வழங்கட்டும். மாறாக கோயில் புறம்போக்கு நிலங்களை வழங்கும்போது, கோயிலின் மரபுகள் பாதிக்கப்படும். எனவே, இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.