இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம்: மூவர் கைது
கோவை, முத்தண்ணன் குளம் பகுதியில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கலகத்தைத் தூண்டும் விதத்தில் கோஷமிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் கடந்த 6 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்லாமியர்கள் குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் அவதூறாக கோஷம் எழுப்பியபடி சென்றுள்ளனர். இதை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்த இந்த விடியோ அடிப்படையில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன கிருஷ்ணன் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த லோகநாதன், அரவிந்த், சிவசாமி ஆகிய மூன்று பேரைக் கைது செய்தார்.
இதையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.