கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நபரை குண்டர் சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.
கோவை, புலியகுளம், ஏரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் குண்டு மணிகண்டன் என்ற மணிகண்டன் (42). இவர் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வழக்கில் ஆகஸ்ட் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் மணிகண்டன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.