நகரப் பகுதியில் மாற்று இடம்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கோவையில் குளக்கரைகள், மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் வசிப்பவர்களுக்கு நகரப் பகுதியிலே மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் முத்தண்ணன் குளம், கணபதி, உக்கடம், இந்திராநகர், வ.உ.சி. நகர், காசிகவுண்டன் புதூர், குமாரசாமி காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக வசித்துவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புறநகர்ப் பகுதிகளில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு மாற்றப்பட்டு வருகின்றனர். இதில், பலர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்குச் சென்றுவிட்ட நிலையில் குழந்தைகளின் படிப்பு, வேலை போன்ற காரணங்களால் பலர் இடம் பெயராமல் உள்ளனர். தொடர்ந்து நகர் பகுதியில் மாற்று இடம் வழங்கக் கோரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்புக் கூட்டங்களில் மக்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு நகர்ப் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வலியுறுத்தி முத்தண்ணன் குளம், குமாரசாமி காலனி, பூசாரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நகருக்கு வெளியே கட்டிக் கொடுக்கப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் செல்ல முடியாது எனவும், நகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு அரசுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் குளக்கரைகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா தர வேண்டும் என போராட்டத்தின்போது மக்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்களுக்கு ஆதரவாக கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுசி.கலையரசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டனர்.