தமிழ்நாடு மின்வாரியத்தில் நடப்பு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் கோவை மின்வாரிய பொது கட்டுமான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடக்கிறது.
இதுகுறித்து கோவை பொது கட்டுமான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கே.என்.சாந்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை பொது கட்டுமான வட்டத்துக்கு உள்பட்ட அலுவலகங்களில் இந்த ஆண்டுக்கான ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கு 25 வயர்மேன், எலக்ட்ரீஷியன்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ விதிகளுக்கு உள்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சிக் காலத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,709 வழங்கப்படும்.
எனவே, கோவை டாடாபாத்தில் அமைந்துள்ள பொது கட்டுமான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறவுள்ள நேர்காணலில் கல்வி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வேலை வாய்ப்பு அலுவலக அட்டை, மாற்றுத் திறனாளி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் காலை 11 மணிக்கு நேரில் கலந்துகொள்ளலாம்.
ஏற்கனவே அரசு மற்றும் தனியார் துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படமாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.