பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு 125 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வித்யாலயத்தின் சார்பில் 2018-2019 கல்வி ஆண்டு முழுவதும் கோவை மாவட்டத்தில் உள்ள 125 பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதையொட்டி, மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியம், விநாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இந்தக் கொண்டாட்டத்தின் நிறைவு விழா ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
வித்யாலய கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் தங்கவேலு வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமி பக்திகாமானந்தர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். வித்யாலய கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
விழாவில் வித்யாலயத்தில் உள்ள 18க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.