திப்பம்பட்டியில் வீர தங்கப் பெருமாள் கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தருளி அப்பகுதி மக்களின் குல தெய்வமாக விளங்கி வரும் வீர தங்கப் பெருமாளுக்கு புதிதாகக் கட்டப்பட்ட திருக்கோயிலின் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாக பூஜையுடன் துவங்கி, திங்கள்கிழமை காலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், விசேஷ சந்திபூத சுத்தி நடைபெற்றது. யாகசாலையில் கோபுர கலச தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் மேளதாளம் முழங்க கோபுரக் கலசங்கள் புறப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.