வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளாததால் காட்சிப் பொருளாக இருக்கும் சோலையாறு அணைப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சோலையாறு அணைக்குச் செல்கின்றனர். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அணையை ஒட்டியுள்ள பகுதியில் பொதுப் பணித் துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இதனால், குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்களில் விளையாடி நேரத்தைக் கழிக்க பூங்கா வசதியாக இருந்தது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக பூங்காவை பராமரித்து, அங்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாததால் தற்போது, சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. அங்கு கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
எனவே, இரு மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லக் கூடிய சோலையாறு அணைப் பூங்காவை பொதுப் பணித் துறையினர் சீரமைத்து அனைத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.