ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சி

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிறுதானியங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் உள்பட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் குறித்த விழிப்புணர்வை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா செப்டம்பர் 1ஆம் தேதியிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊர்வலம், வீதி நாடகங்கள் உள்பட பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை உள்பட பல்வேறு வகையான சிறுதானியங்களால் அலங்காரம் செய்யப்பட்ட வடிவங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் உள்பட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உணவுகளின் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தன. ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடத்திலும் சிறுதானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
வாகன விழிப்புணர்வு பிரசாரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வாகனப் பிரசாரத்தை ஆட்சியர் கு.ராசாமணி தொடங்கிவைத்தார். வாகனப் பிரசாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், சூலூர் வழியாக திருப்பூர் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com