கோவையில் மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரம், தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா குப்தா (39). இவர், கோவை, சாய்பாபா காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஆதித்யா தனது குடும்பத்துடன் குஜராத்துக்கு கடந்த 20ஆம் தேதி சென்றார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் ஆதித்யா குப்தாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆதித்யா தனது மில் மேலாளரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆதித்யா குப்தா தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மாலை வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரம், தங்க நகைகள், ரூ.2.50 லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸாரிடம் ஆதித்யா குப்தா புகார் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களை வரவழைத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அதில் கைப்பற்றப்பட்ட சில கைரேகைகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதித்யா வீட்டின் முன்பக்கம் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அவர் வசிக்கும் தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.