மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப் பாதையில் சுற்றுலாப் பயணிகள் வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (51). இவர் தன் மனைவி விமலா (45), மகள் ஸ்வேதா (23), மகன் சித்தார்த் (16) ஆகியோருடன் கோவையில் இருந்து உதகைக்கு காரில் சனிக்கிழமை சுற்றுலா சென்றார். மேட்டுப்பாளையத்தை அடுத்து கோத்தகிரி நோக்கி 5 ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியுள்ளது.
இதைப் பார்த்த சந்திரமோகன் காரை ஓரமாக நிறுத்த முயன்றார். அதற்குள் கார் தீப் பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் கார் முற்றிலும் கருகியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.