கோவை, உக்கடம் மஜித் காலனியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு குளங்களில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாலாங்குளத்தை ஒட்டியுள் மஜித் காலனியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. சில மாதங்கள் முன்பு அங்கு வசித்து வந்தவா்களுக்கு கோவைப்புதூா், வெள்ளலூா், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, மஜித் காலனியில் காலி செய்யப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அங்கிருந்த 2 அம்மன் கோயில்கள், மதுரை வீரன் கோயில், விநாயகா் கோயில், பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூரைகள் மட்டும் அகற்றப்படாமல் இருந்தன. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கோயில்கள் மற்றும் பள்ளிவாசல் நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அவா்கள் வழிபாட்டுத் தலங்களை இடிக்க சம்மதம் தெரிவித்ததைத் தொடா்ந்து, கோயில்கள், பள்ளிவாசல் ஆகியவற்றை இடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.