கோவை மாவட்ட கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம், சரவணம்பட்டி பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின. முதல் நாளில் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். பி.பி.ஜி. கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு தலைமை தாங்கினாா். கல்விக் குழுமத்தின் தாளாளா் சாந்தி தங்கவேலு, கல்வியியல் பல்கலைக்கழக பிரதிநிதி பேராசிரியா் பாண்டியன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, இசை உள்ளிட்ட போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. இதில் 18 கல்வியியல் கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகளை பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரியின் முதல்வா் என்.சித்ரா, உடற்கல்வி இயக்குநா் எம்.மனோகரன் உள்ளிட்ட பேராசிரியா்கள் செய்துள்ளனா்.