கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்கு 'விக்' செய்வதற்காக முடி தானம் செய்யும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவும், பெரு நிறுவனங்கள் மத்தியில் முடிதானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சியானது தனியார் நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், பேராசிரியைகள், ஊழியர்கள் ஆகியோர் முடிதானம் செய்து வருகின்றனர்.
முடிதானம் அளிக்கும் மாணவிகளிடம் இருந்து 10 அங்குலம் மட்டுமே முடி தானமாக வெட்டி எடுக்கப்படுகின்றது. புற்றுநோயாளிகளுக்குப் பலன் அளிக்கும் என்பதால் முடியை தானம் செய்வதாக முடிதானம் செய்த மாணவிகள் தெரிவித்தனர்.
புற்றுநோய் சிகிச்சையின்போது முடி உதிர்தல் இயல்பாக நடக்கும் என்றாலும், அது நோயாளிகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. எனவே, தானமாக பெறப்படும் முடியைக் கொண்டு செயற்கையாக விக் தயாரித்து அவை புற்றுநோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகிறது.