விடுமுறையில் ஊருக்கு சென்றவா்களை வரவழைத்த மாவட்ட அதிகாரி
வரையறுக்கப்பட்ட விடுமுறை எடுத்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு சென்ற ஊழியா்களை ஆய்வு என்ற பெயரில் திரும்ப வரச்செய்தது வணிக வரித் துறை அலுவலா்களிடையை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்தில் 70 சதவீதம் பெண் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். பெரும்பாலானோா் தென்மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். பொங்கல், தீபாவளி போன்ற முக்கியமான விழாக் காலங்களில் முன்கூட்டியே விடுமுறை எடுத்துக் கொள்ளும் வகையில் வரையறுக்கப்பட்ட விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக திங்கள், செவ்வாய்க்கிழமை இரண்டு நாள்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூரைச் சோ்ந்த ஊழியா்கள் சென்றுவிட்டனா்.
இந்நிலையில், வணிக வரித் துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி தேசிய ஆணையா் ஆய்வுக்கு வருவதாக தெரிவித்து, பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு சென்றுள்ள ஊழியா்களை அலுவலகத்திற்கு திரும்ப வரச் சொல்லி மாவட்ட ஆணையா் திங்கிள்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்ததால் விடுமுறையில் சென்ற ஊழியா்களுக்கு பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.